Wednesday, July 28, 2010

2. சாங்கிய யோகம் (உண்மையறிவை துணைகொள்)

ஸ்ரீ பகவானின் எழுச்சியூட்டும் வார்த்தைகள்: 1-3

சஞ்யன் சொன்னது

1. இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு சொல்லத் தொடங்கினார்.

ஸ்ரீ பகவான் சொன்னது

2. அர்ஜுனா! மேன்மக்களுக்கு பொருந்தாததும், சொர்க்கப்பேற்றைத் தடுப்பதும், இகழ்ச்சிக்கு உரியதுமான மனச்சோர்வு இக்கட்டான இந்த நிலையில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது?

3. அர்ஜுனா! பேடித்தனத்திற்கு இடம் தராதே. இது உனக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே! அற்பமான இந்த மனத்தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.

போரிட மறுப்பதற்கான இரண்டு காரணங்கள் : 4-6

அர்ஜுனன் சொன்னது

4. எதிரிகளை கொல்பவனே! மது என்ற அரக்கனைக் கொன்றவனே! வழிபடத்தக்கவர்களான பீஷ்மரையும் துரோணரையும் எதிர்த்து நான் எப்படி பாணங்களை விடுவேன்?

5. மேன்மை பொருந்திய ஆச்சாரியர்களைக் கொல்வதை விட பிச்சையேற்று வாழ்வதுகூட நிச்சயமாக நல்லது. இந்த ஆச்சாரியர்கள் ஆசை வசப்பட்டவர்களாக இருந்தாலும், இவர்களைக் கொன்று, இவர்களது ரத்தத்தில் தோய்ந்த சுகபோகங்களை, இவர்களது இடத்திலேயே இருந்துகொண்டு எப்படி அனுபவிப்பது?

6. யாரைக் கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்ப மாட்டோமோ அந்தக் கௌரவர்கள் நம் முன்னால் நிற்கின்றனர். நாம் இவர்களை வெல்வது, இவர்கள் நம்மை வெல்வது - இதில் எது நமக்கு சிறந்தது என்பது தெரியவில்லையே!

அர்ஜுனனின் சரணாகதி : 7-10

7. சிறுமை என்ற கேட்டினால் நிலைதடுமாறியுள்ளேன். எது தர்மம் என்பதை அறியாமல் குழம்பி நிற்கிறேன். எனக்கு எது நிச்சயமான நன்மை தருமோ அதைச் சொல்வாய். நான் உனது சீடன். உன்னை சரணடைகிறேன். எனக்கு அறிவுரை சொல்வாய்.

8. எதிரிகள் இல்லாததும் வளமானதுமான அரசைப் பெற்றாலும், தேவர்களின் தலைமைப் பதவியே எனக்குக் கிடைத்தாலும் புலன்களை வாட்டுகின்ற எனது கவலையை அது போக்குமென்று தோன்றவில்லை.

சஞ்யன் சொன்னது

9. இவ்வாறு கூறியபிறகு, எதிரிகளை எரிப்பவனும் தூக்கத்தை வென்றவனுமாகிய அர்ஜுனன் புலன்களை வென்றவராகிய ஸ்ரீ கிருஷ்ணரிடம், 'நான் போரிட மாட்டேன்' என்று சொல்லிவிட்டு மெளனமாக இருந்து விட்டான்.

1o. மன்னா! இரண்டு படைகளுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சற்றே சிரிப்பவர்போல் கூறலானார்.

ஸ்ரீ பகவானின் கீதா உபதேசம் ஆரம்பம்

ஸ்ரீ பகவான் சொன்னது

11. நீ துக்கப்படக் கூடாதவர்களுக்காக துக்கப்படுகிறாய். அதேவேளையில், பண்டிதர்களைப்போல் பேசவும் செய்கிறாய். இறந்தவர்களைப்பற்றியோ, இருப்பவர்களைப் பற்றியோ அறிவாளிகள் கவலைப்படுவதில்லை.

12. நான் ஒருபோதும் இல்லாமல் இல்லை; நீயும் இந்த மன்னர்களும்கூட இல்லாமல் இருந்ததில்லை. நாம் யாரும் இனி இல்லாமல் போய்விடுவோம் என்பதும் இல்லை.

13. இந்த உடம்பு எப்படி இளமையும் வாலிபமும் மூப்பும் அடைகிறதோ அப்படியே அதில் உறைகின்ற ஆன்மா வேறு உடலையும் பெறுகிறது. அறிவாளி அதை எண்ணிக் குழம்புவதில்லை.

14. குந்தியின் மகனே! புலன்களுக்கும் பொருட்களுக்கும் உள்ள தொடர்பு குளிர்-சூடு, சுகம்-துக்கம் ஆகியவற்றை தருவனவாகவே இருக்கும். ஆனால் அவை தோன்றி மறைபவை, நிலையற்றவை. அர்ஜுனா! அவற்றைப் பொறுத்துக்கொள்.

15. ஆண்களில் சிறந்தவனே! இவை (சுகம் - துக்கம் போன்ற இரட்டைகள்) யாரை பதற்றத்திற்கு உள்ளாக்குவதில்லையோ, யார் சுகதுக்கங்களை சமமாகக் கொள்பவனோ, யார் விவேகியோ அவன் நிச்சயமாக மரணமில்லாப் பெருநிலைக்கு தகுதி வாய்ந்தவன் ஆகின்றான்.

16. உண்மையற்றது இருக்காது, உண்மையானது இல்லாமல் போகாது. இந்தக் கருத்தை மகான்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

17. எதனால் இந்த உலகம் அனைத்தும் வியாபிக்கப் பட்டுள்ளதோ அது அழிவற்றது என்பதை அறிந்துகொள். மாறாத அந்த ஒன்றை அழிக்க யாராலும் முடியாது.

18. உடம்பிலுள்ள ஆன்மா என்றென்றும் இருப்பது, அழிவற்றது, அறிய முடியாதது. ஆனால் உடம்புகள் முடிவு உடையவை என்று சொல்லப்படுகிறது. எனவே, அர்ஜுனா! போர் செய்.