திருதராஷ்டிரன் கேட்டது
1. சஞ்சயா! தர்மபூமியாகிய குருஷேத்ரத்தில் போர் செய்வதற்காகக் கூடிநின்ற என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?
சஞ்சயன் சொன்னது
3. ஆசாரியரே! உமது சீடனும் புத்திசாலியும் துருபதனின் மகனுமான திரிஷ்டத்யும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் பெரிய படையை பாருங்கள்.
4-6. சாத்யகி, விராட மன்னன், மகாரதனான துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், பலசாலியான காசி மன்னன், புருஜித், குந்திபோஜன், மனிதருள் சிறந்தவனான சிபியின் வம்சத்தில் வந்த மன்னன், பராக்கிரமசாலியான யுதமன்யு, பலசாலியான உத்தமௌஜன், அபிமன்யு, திரௌபதியின் பிள்ளைகள் என்று பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான பெரிய வில்வீரர்கள் பலர் பாண்டவர் படையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாரதர்கள்.
7. மனிதருள் சிறந்தவரே! நமது படையில் சிறந்த தலைவர்களாக உள்ளவர்களையும் உங்களுக்கு கூறுகின்றேன், தெரிந்துகொள்ளுங்கள்.
8-9. துரோணாச்சரியரகிய நீங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றி வீரரான கிருபர், அசுவத்தாமன், விகர்ணன், சோமதத்தனின் மகனான பூரிசிரவஸ் ஆகியோருடன் மேலும் பல வீரர்களும் உள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இவர்கள் போரில் வல்லவர்கள், எனக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.
10. பீஷ்மர் காக்கின்ற நமது படை அளவற்று பறந்து கிடக்கின்றது. பீமன் காக்கின்ற பாண்டவர் படை அளவுக்கு உட்பட்டு நிற்கிறது.
11. நீங்கள் எல்லோரும் உங்கள் அணிவகுப்புகளில் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு பீஷ்மரையே காக்க வேண்டும்.
12. வல்லமை பொருந்தியவரும் குரு வம்சத்தில் மூத்தவரும் பாட்டனுமான பீஷ்மர் துரியோதனனுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக சிம்ம கர்ஜனைபோன்ற உரத்த ஒலியை எழுப்பினார்; சங்கையும் ஊதினார்.
13. அதன்பிறகு சங்குகளும் பேரிகைகளும் தப்பட்டைகளும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாக இருந்தது.
14. பிறகு, வெண்ணிறக் குதிரைகள் பூட்டிய பெரிய ரதத்தில் இருந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் தெய்வீகமான சங்குகளை உரக்க ஊதினார்கள்.
15. ஸ்ரீகிருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும், பெரும் செயல் ஆற்றுபவனாகிய பீமன் பௌண்ட்ரம் என்ற பெரிய சங்கையும் ஊதினார்கள்.
16. குந்திதேவியின் மகனான யுதிஷ்டிரர் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகாதேவனும் ஷூகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.
17-18) மன்னா! சிறந்த வில்லாளியான காசி மன்னனும், மகாரதனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராட மன்னனும், வெல்ல முடியாதவனாகிய சாத்யகியும், துருபத மன்னனும், திரௌபதியின் பிள்ளைகளும், தோள்வலிமை பொருந்திய அபிமன்யுவும் பிறரும் தனித்தனி சங்குகளை ஊதினார்கள்.
19. ஆகாயத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்தப் பேரொலி கௌரவர் கூட்டத்தின் இதயங்களை பிளந்தது.
அர்ஜுனன் படைகளைப் பார்வையிடுதல்
20. மன்னா! அதன்பிறகு, அனுமக்கொடியை உடையவனான அர்ஜுனன், போரை ஆரம்பிப்பதற்குத் தயாராக நின்ற கௌரவர் அணியையும் ஆயுதங்கள் பாயத் தயாராக இருந்ததையும் கண்டு, வில்லை உயர்த்தியபடி ஸ்ரீகிருஷ்ணரிடம் இந்த வார்த்தைகளை கூறலானான்.
அர்ஜுனன் சொன்னது
23. தீய மனத்தினனான துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்வதற்காக இங்கே போருக்காக கூடியிருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.
சஞ்சயன் சொன்னது
24-25. மன்னா! அர்ஜுனன் இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறியதும் அவர் சிறந்த அந்தத் தேரை இரண்டு அணிகளுக்கு நடுவிலும், பீஷ்மர் துரோணர் மற்றும் எல்லா மன்னர்களுக்கு எதிரிலும் நிறுத்தி, 'அர்ஜுனா, கூடியிருக்கின்ற இந்த கௌரவர்களைப் பார்' என்று சொன்னார்.
26. அர்ஜுனன் அங்கே இரண்டு அணிகளிலும் இருக்கின்ற தந்தையர், பாட்டன்மார், ஆச்சாரியர்கள், மாமன்மார், சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்கள், தோழர்கள், மாமனார்கள் மற்றும் நண்பர்களை பார்த்தான்.
27. உறவினர் அனைவரையும் நன்றாகப் பார்த்த அர்ஜுனன் ஆழ்ந்த இரக்கத்தின் வசப்பட்டு நொந்த மனத்துடன் பின்வருமாறு கூறினான்.
அர்ஜுனன் சொன்னது
30. கிருஷ்ணா! எனது கையிலிருந்து வில் நழுவுகிறது, உடம்பு எரிகிறது, நிற்க முடியவில்லை, மனம் குழம்புவது போல் இருக்கிறது; விபரீதமான சகுனங்களையும் காண்கிறேன்.
31. கிருஷ்ணா! போரில் உறவினரைக் கொல்வதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றி, அரசு, சுகம், இவை எதையும் நான் விரும்பவில்லை.
32-34. கோவிந்தா! யாருக்காக இந்த அரசும் சுகபோகங்களும் விரும்பத்தக்கவையோ அந்த ஆச்சாரியர்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள், சம்பந்திகள் எல்லோரும் தங்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்துவிடத் துணிந்து போர்க்களத்தில் நிற்கிறார்கள். அரசினாலும் சுகபோகங்களாலும் எங்களுக்கு என்ன பயன்? உயிர் வாழ்ந்துதான் என்ன லாபம்?
35. கிருஷ்ணா! நான் கொல்லப்பட்டாலும், மூன்று உலகங்களையுமே பெறுவதாக இருந்தாலும்கூட இவர்களைக் கொல்ல மாட்டேன். வெறும் அரசுக்காக இவர்களைக் கொல்வேனா?
36. கிருஷ்ணா! திருதராஷ்டிரரின் பிள்ளைகளைக் கொள்வதால் நமக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது? அவர்கள் பெரும் பாவிகளே ஆனாலும் அவர்களைக் கொல்வதால் நமக்குப் பாவமே வந்துசேரும்.
37. மாதவா! உறவினராகிய துரியோதனன் முதலானோரைக் கொல்வது நமக்குத் தகாது. உறவினரைக் கொன்று விட்டு நாம் எப்படி சுகத்தை அனுபவிக்க முடியும்?
38-39. கிருஷ்ணா! பேராசையால் விவேகம் இழந்த மனத்தினராகிய இவர்கள் குலநாசத்தால் உண்டாகும் தீங்கையும், நண்பர்களை வஞ்சிப்பதால் விளைகின்ற பாதகத்தையும் தெரிந்துகொள்ளவில்லை. அதனைத் தெளிவாக அறிந்திருக்கின்ற நாம் ஏன் அந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளக் கூடாது?
40. குலம் நாசமடையும்போது, காலங்காலமாக இருந்து வருகின்ற குல தர்மங்கள் அழிகின்றன. தர்மம் குன்றுவதால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.
41. விருஷ்ணி குலத்தில் உதித்தவனே கிருஷ்ணா! அதர்மம் மிகுவதால் குலமகளிர் கற்பை இழப்பார்கள். பெண்கள் கற்பை இழப்பதால் ஜாதிக்கலப்பு உண்டாகிறது.
42. ஜாதிக்கலப்பினால், குலத்தை அளித்தவர்களுக்கும் குலத்தினருக்கும் நரகமே கிடைக்கிறது. அவர்களுடைய முன்னோர்கள் சாதம் மற்றும் தண்ணீரால் செய்யப்படுகின்ற கிரியைகளை இழந்து வீழ்வார்கள்.
43. குலத்தை அளித்தவர்களின் தீமையால் ஜாதிக்கலப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக, காலங்காலமாக இருந்துவருகின்ற ஜாதிதர்மங்களும் குலதர்மங்களும் அழிகின்றன.
44. கிருஷ்ணா! குலதர்மங்களை இழந்தவர்கள் நரகத்தில் நீண்டகாலம் வாழவேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம்.
45. அரசபோகத்தினை அனுபவிப்பதற்கான ஆசையால் உறவினரைக் கொல்லவும் முன்வந்தோம் நாம். இந்த மகாபாவத்தை செய்வதற்குத் துணிந்தோமே, அந்தோ!
46. எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னை, கையில் ஆயுதமுடைய துரியோதனன் முதலானோர் போரில் கொல்வார்களானால்கூட அது எனக்கு மிகுந்த நன்மை செய்வதே ஆகும்.
47. இவ்வாறு சொல்லிவிட்டு, அம்போடு கூடிய தனது வில்லை எறிந்த அர்ஜுனன், துக்கத்தில் துடிக்கின்ற மனத்துடன் போர்க்களத்தில் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.
உபநிஷதமும், பிரம்ஹ வித்யையும், யோக சாஸ்திரமும், ஸ்ரீகிருஷ்ண-அர்ஜுனர்களின் உரையாடலுமாகிய ஸ்ரீமத் பகவத் கீதையில் அர்ஜுன விஷாத யோகம் என்கின்ற முதல் அத்தியாயம் நிறைவுறுகிறது.